இஸ்லாத்தின் பரவலோடு மஸ்ஜித்கள் சமூக, கலாசார அறிவுறுத்துறைகளில் பெரும் பங்களிப்பாற்றியுள்ளன. ஆன்மீக ரீதியிலான வணக்க வழிபாட்டு மையங்களாக மாத்திரமன்றி அறிவு பெறும் கேந்திர நிலையமாகவும் மஸ்ஜித்கள் செயற்பட்டன. அந்தவகையில் அல்குர்ஆன் பிரதிகள் அல்ஹதீஸ்கள் என்பனவற்றோடு பல்வேறு கலைகள் சார்ந்த நூல்களும் மஸ்ஜித்களில் கேசரிக்கப்பட்டன.

காலப்போக்கில் மஸ்ஜிகளை மையப்படுத்திய கல்வி வட்டங்கள் உயர் கல்விக்கான நிலைங்களாக மாற்றம் பெற்றன. பாடசாலைகள் நகரங்களில் தோற்றம் பெறலாயின. பக்தாத், டமஸ்கஸ், கெய்ரோ கோர்டோவா போன்ற நகரங்களில் தோற்றம் பெற்ற இலாகா நிலையங்கள் முஸ்லிம்களின் அறிவு வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளன.

அந்த வகையில் ஈ.டி. ஜோன்சன் எழுதியுள்ள நூலகங்களின் வரலாறு குறித்த நூலில், 'மஸ்ஜித் நூலகங்களின் அதிகமான சேகரிப்புகள் இஸ்லாமிய அறிவுடன் தொடர்புடையவையாக அமைந்திருந்தன. அல்குர்ஆன் பிரதிகளும் அவற்றின் தப்ஸீர்களும் ஆயிரக்கணக்கான பாகங்களாக இருந்தன. அதேபோன்று ஆரம்பகால இஸ்லாமிய தலைவர்கள், ஆட்சியாளர்களது வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கிய சேகரிப்புகளும் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எம். கிரேக் என்பவர் இஸ்லாமிய நூலகங்கள் குறித்து எழுதியுள்ள நூலில், 'இஸ்லாமிய உலகில் பிரசித்திபெற்ற பல நூலகங்கள் இருந்தன. அவற்றுள் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மிகப்பிரபல்யமிக்க ஒன்றாகும். 9ஆம் நூற்றாண்டில் கெய்ரோவில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் 18ம் நூற்றாண்டில்தான் பல்கலைக்கழக அந்தஸ்த்தைப்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். ஹமதா முஹம்மத்தின் கருத்துப்படி, டமஸ்கஸ்ஸிலுள்ள மஸ்ஜிதுல் உமவி, கெய்ரோவிலுள்ள ஜாமிஉல் அஸ்ஹர், பக்தாதிலுள்ள ஜாமிஉல் மன்ஸூர், பக்தாத்தில் உள்ள அல் ஜாமிஉல் கமரிய்யா, டியூனிசியாவிலுள்ள ஜாமிஉ ஸைதூனா, அல் மஸ்ஹித் அல் ஜாமிஉ க்கா மதீனா மஸ்ஜிக்கள் ஆகியன மிகப்பெரிய நூலகங்களாக விளங்கியுள்ளன.

மஸ்ஜித்களில் அறிஞர்கள் பாடபோதனைகளை நடாத்துகின்ற மரபு பேணப்பட்டு வந்தது. அறிஞர்களை சுற்றி மாணவர்கள் அமர்ந்து கொள்வார், தாம் பெற்றிருக்கின்ற அறிவை அவர்கள் விளக்கமாக தமது மாணவர்களுக்கு போதிப்பர். மாணவர்கள் அதனை எழுதிக்கொள்வர். இவ்வாறு அறிஞர்களது விளக்கவுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூல்களாகவும் தொகுப்புக்களாகவும் வெளிவந்தன. அத்தோடு மஸ்ஜித் நூலகங்கள் சில பெறுமதியானதும் அரிதானதுமான நூல்களைப் பெற்றிருந்தன.

மஸ்ஜிதுகளுடன் இணைந்தபடி தான் அரபு இஸ்லாமிய நாடுகளில் இன்றும் நூலகங்கள் இருந்து வருவதனைக் காணலாம். இந்நூலகங்கள் பல நூற்றாண்டு காலமாக அறிவுக் கருவூலங்களை தம்மகத்தே உள்ளடக்கி வருவதனை அவதானிக்க முடியும். இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் ஆட்சியாளர்கள் அறிஞர்களின் பங்களிப்புடன் இந்நூலகங்கள் வளர்ச்சியுற்று வந்துளள்ன.

யாகூத் அல்ஹமவி என்பவர் தமது முஃஜமுல் புல்தான் என்ற நூலில், எனது காலத்தில் மரவ் எனும் நகரில் அல் ஜாமிஉல் கபீர் எனும் பெரிய மஸ்ஜிதில் 02 நூலகங்கள் இருந்தன. இதிலொன்றுக்கு அல் அஸீஸிய்யா என்று பெயரிடப்பட்டிருந்தது. அது அஸீஸுத்தீன் அபூபக்கர் என்பவரால் வழங்கப்பட்டிருந்தது. அங்கு 12,000 பாகங்களைக் கொண்ட நூல்கள் இருந்தன. அல் காமிஸிய்யா என்று மற்றொரு நூலகமும் இருந்தது. அது யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எம்.எம். ஸப்வான்
சீனன்கோட்டை
பேருவளை