இலங்கையில் ஒருநாளில் 12மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத்தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார்.

இலங்கையில் புற்று நோய் அதிகரித்து வருவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வயோதிபவமும் மற்றும் மரபணுவும் காரணமாக அமைகிறது.

இலங்கையில் புகைத்தல், மதுபானம் அருந்துதல், கிருமிநாசினி கலந்த உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சியின்மை, உறைப்பான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றினால்புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆண்களில் ஏற்படும் புற்றுநோயானது வாய் மற்றும் தொண்டைப்பகுதிகளில் ஏற்படுவதுடன் பெண்களுக்கு பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மாதவிடாய் நின்ற நிலையில் ஏற்படும் தொடர்ச்சியான இரத்தப்போக்கு புற்றுநோய் அறிகுறிகளாக கொள்ளப்படுகின்றது.

மனித உடலில் புற்றுநோயானது ஏற்பட்டுள்ளதை அறிவது மிகவும் கடினமானதான ஒன்றாக காணப்படுகின்றது. நீண்ட நாள் இருமல், வாய்ப்புண், மலம் கழித்தலில் சீத மேற்படுதல், உடலின் வெளிப்பகுதிகளில் கட்டிகள் ஏற்படுதல் போன்றன புற்றுநோய்களுக்கான அறிகுறிகளாகும்.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை அணுகினால் நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயை அறிவதற்கான வசதிகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன.

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அதனை குணமாக்குவதற்கு வழிமுறைகள் உள்ளதுடன் நோய்க்கிருமிகள் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான கதிர்வீச்சு சிகிச்சைகளும் உள்ளன.

புற்று நோயை கட்டுப்படுத்தும் இயற்கை உணவுகளை அதிகம் உண்பதுடன் மஞ்சள் பழங்கள், அவரை இனத்தாவரங்கள், கற்றாழை போன்றவை புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh